அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் சாவு


அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

கர்ப்பிணி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா(வயது 28). இவருடைய கணவர் லெனின். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் ரஞ்சிதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 8 மாத கர்ப்பிணியான ரஞ்சிதாவை கடந்த 19-ந் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆண் குழந்தை

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீர்ச்சத்து குறைவாக உள்ளது எனக் கூறி தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கடந்த 29-ந் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் ரஞ்சிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெண் சாவு

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சை காரணமாக ரஞ்சிதா உயிரிழந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரி வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசில் புகார்

இதுகுறித்து ரஞ்சிதாவின் உறவினர்கள் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story