மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலி; கணவர் உள்பட 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலி; கணவர் உள்பட 3 பேர் படுகாயம்
x

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர், மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த அ.வெள்ளோடு சிறுமலை அடிவாரம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ்கமல் (வயது 43). விவசாயி. இவருடைய மனைவி லீமா ரோஸ்லின் (38). இவர்களுக்கு மார்ட்டின் வின்சி (16), ஆரோ மெட்டில்டா (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மார்ட்டின் வின்சி திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருடைய பள்ளியில் நேற்று பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்தோணி ராஜ்கமல், தனது மனைவி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அ.வெள்ளோடு பிரிவு அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்தோணி ராஜ்கமல் உள்பட 3 பேர், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த திண்டுக்கல் கிழக்குரதவீதியை சேர்ந்த தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லீமா ரோஸ்லின் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story