நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்; தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை


நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்; தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2023 9:30 PM GMT (Updated: 10 Oct 2023 9:30 PM GMT)

நிலக்கோட்டையில் பட்டப்பகலில் தொழிலாளியை 6 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பட்டப்பகலில் தொழிலாளியை 6 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

பட்டப்பகலில் கொலை

திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 42). இவர், நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள பழைய இரும்பு கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அழகர், இரும்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடைக்கு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. வாகனங்களில் இருந்து அரிவாளுடன் இறங்கிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இரும்பு கடைக்குள் புகுந்து கண்இமைக்கும் நேரத்தில் அழகரை சரமாரியாக வெட்டினர். இதில், நிலைகுலைந்த அழகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தங்களது வாகனங்களில் தப்பிச்சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அழகரை கொலை செய்த கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழிக்குப்பழியாக...

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில், அழகருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவரை சுள்ளான் ரமேசின் கூட்டாளிகள் நேற்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டையில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை முன்பு தொழிலாளி கொைல செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story