இளம்பெண் எரித்துக்கொலை


இளம்பெண் எரித்துக்கொலை
x

திருப்போரூர் அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை

திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சுகன்யா (வயது 38). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம். இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யா, புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

கடந்த 7-ந் தேதி இரவு வேலை செய்து கொண்டிருந்த போது கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுகன்யா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுகன்யாவை மீட்டனர் இதில் அதே பகுதியை சேர்ந்த அருண் (21), லெனின்(58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சுகன்யா செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் படூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சுகன்யா சிகிச்சை பலனின்றி கடந்த 8-ந் தேதிபரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக அவர், தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சுகன்யா உடலில் பெட்ரோல் பட்டு தீ காயம் ஏற்பட்டதால் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த குமார் (56) கடையில் இருந்து வெளியே செல்வதும் பெட்ரோல் நிலையத்தில் இருந்து பெட்ரோல் வாங்கி சென்றதும் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் நேற்று குமார் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சண் அடைந்தார். போலீஸ் விசாரணையில், குமார் கடந்த 2 ஆண்டுகளாக சுகன்யாவை ஒரு தலையாக காதலித்து வந்ததும் இது குறித்து சுகன்யா, குமாரின் மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்ததும் தெரியவந்தது. இந்த ஆத்திரத்தில் சுகன்யா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை குமார் ஒப்பு கொண்டார். கேளம்பாக்கம் போலீசார் குமாரை கைது செய்தனர்.


Next Story