சதுரங்கப்பட்டினம் அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது


சதுரங்கப்பட்டினம் அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
x

சதுரங்கப்பட்டினம் அருகே 8 ஆண்டுகளாக இளம்பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை மாமல்லபுரம் மகளீர் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அருகே வெங்கப்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 30), இவர் அங்குள்ள சிமெண்டு கற்கள் செய்யும் சூளையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை முரளி காதலித்து வந்தார். அந்த பெண்ணை முரளி வெங்கப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முரளியை வலியுறுத்தி வந்தார்.

அதற்கு முரளி தனது குடும்ப சூழ்நிலை தற்போது சரியில்லை என்றும், அதனால் சில வருடங்கள் நீ எனக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறி நம்ப வைத்துள்ளார். அவரது வார்த்தையை நம்பிய அப்பெண் முரளியுடன் நெருக்கமாக பழகி உள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதுகுறித்து அவரிடம் தெரிவித்த அப்பெண்ணை சமாதானம் செய்த முரளி, கவலைப்படாதே உன்னை நான் கைவிடமாட்டேன். நிச்சயம் திருமணம் செய்து கொள்கிறேன். இப்போது இருக்கும் சூழலில் நீ கர்ப்பத்தை கலைத்திடு என்று கூறி கருகலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து அவரது கருவை கலைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-6-2023 அன்று விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை முரளி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த அவரது காதலி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முரளி மீது புகார் செய்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்களபிரியா, இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக வழக்குப்பதிவு செய்து, பூந்தண்டலத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த முரளியை கைது செய்தனர். பிறகு அவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story