மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை... டிஜிபி-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை... டிஜிபி-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
x

அங்கீகரிக்கப்படாதவர்கள், மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென டிஜிபிக்கு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அக்குபஞ்சர், எலக்ட்ரோபதி, யோகா போன்ற மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடும் தங்களுடையை உரிமைகளில் தலையிடக்கூடாது என காவல்துறையினருக்கு தடை விதிக்கவேண்டும் என இந்த மருத்துவசேவை வழங்கும் 61 பேர் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்கள்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுமுறை மருத்துவம் செய்ய மனுதாரர்களுக்கு தகுதி இல்லை என்றும், அவர்கள் படித்துள்ள டிப்ளமோ படிப்பு அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்தார்.

தகுதி இல்லாத இவர்களை மருத்துவம் பார்க்கவைப்பது ஆபத்து என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாட்டில் மாற்று மருத்துவம் என்பது நடைமுறையில் இருக்கும்போது, தகுதி இல்லாத மருத்துவர்கள் எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என்றும், 6 மாதகால டிப்ளமோ படிப்பை வழங்கக்கூடிய அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மனுதாரர்கள் சட்டப்படி செல்லுபடியாகும் சான்றிதழ்களை பெற்றிருக்கவில்லை என்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்யவில்லை என்பதால், மாற்றுமுறை மருத்துவம் செய்ய அவர்கள் உரிமைகோர முடியாது எனக்கூறி அவர்களது கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், பதிவுசெய்யாத, அங்கீகரிக்கப்படாதவர்கள், மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.


Next Story