பெண்களுக்கான இலவச பஸ்களை மலைப்பகுதியிலும் இயக்க நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவு


பெண்களுக்கான இலவச பஸ்களை மலைப்பகுதியிலும் இயக்க நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
x

பெண்களுக்கான இலவச பஸ்களை மலைப்பகுதியிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற விடியல் பயணத் திட்டத்தை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.

புதிய பஸ்களை அறிமுகப்படுத்துவது, பழைய பஸ்களை புதுப்பித்து இயக்குவது ஆகிய பணிகளை விரைவுப்படுத்திடவும், பணிக்கு தவறாமல் வருகை புரிந்து பஸ்களை இயக்கிட ஏதுவாக பணிக்கு வராத பணியாளர்களுடன் கலந்துரையாடவும் கேட்டுக்கொண்டார்.

காலிப்பணியிடங்களை நிரப்பிட ஏதுவாக பணியாளர் நியமனத்திற்காக இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையின் நிலையை ஆய்வு செய்தார்.

அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையகங்கள், மின்சார செலவை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூரிய மின் தகடுகள் நிறுவுதலின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து அந்த பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டார்

மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித இடர்பாடும் இன்றி பஸ்களில் பயணிக்க ஏதுவாக குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story