விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் ஆஜராகியிருந்தார். அப்போது வழக்கின் விசாரணையை செப்.26-ந் தேதி (அதாவது இன்று) தள்ளி வைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் வரமுடியாத நிலையில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புதுறை வழங்கிய குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளது அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி பூரண ஜெயஆனந்த், இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு லஞ்ச ஒழிப்புதுறை வழங்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story