அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் - ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி பயணம்...!


அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் - ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி பயணம்...!
x
தினத்தந்தி 23 Jun 2022 2:07 PM GMT (Updated: 23 Jun 2022 2:08 PM GMT)

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பாதியில் நிகழ்ச்சி மேடையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து சென்றார். இந்த சம்பவம் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் அரங்கேறிய பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தனித்தனியே சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவை அதிமுக ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் கூட்டணி கட்சியினர் அங்கு இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் ஆகையால் அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு வரவேண்டுமென அண்ணாமலை மற்றும் சிடி ரவி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்துடன், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது ஆதரவளிக்க அங்கு செல்வதாக கூறப்படும் நிலையில் அதிமுக-வில் நிலவி வரும் உட்கட்சி விவகாரம் குறித்தும் டெல்லியில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இன்றைய டெல்லி பயணம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


Next Story