அதிமுக அலுவலக வழக்கு: விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. வெங்கடேசன் நியமனம்


அதிமுக அலுவலக வழக்கு: விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. வெங்கடேசன் நியமனம்
x
தினத்தந்தி 31 Aug 2022 6:05 AM GMT (Updated: 31 Aug 2022 6:06 AM GMT)

அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக அலுவலக வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் 4 விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா,ரேணுகா, செல்வின் சாந்தக்குமார் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story