3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் தொன்மையான கடிகாரம்


3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் தொன்மையான கடிகாரம்
x

3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தொன்மையான கடிகாரம் கருப்பு துணியால் மூடப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. தெற்கு ரெயில்வேயில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. 144 ஆண்டுகள் கடந்தும் இந்த தொண்மையான கட்டிடம் எழில்மிகு வகையில் காட்சி அளிக்கிறது. நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி வருகின்றது.

ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த எழும்பூர் ரெயில் நிலையத்தில் 115 ஆண்டுகள் பழமையான கடிகாரம் இயங்கி வந்தது. இங்கிலாந்தில் உள்ள டெர்பி என்ற ஊரில் செயல்பட்டு வந்த 'ஜெ ஸ்மித் அண்டு சன்ஸ்' என்ற நிறுவனம் இந்த கடிகாரத்தை தயாரித்து கொடுத்தது. முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட கடிகாரமாக இது உள்ளது. டிஜிட்டல் கடிகாரம் வருவதற்கு முன்பாக எழும்பூர் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு இந்த கடிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் போது 4-வது நடைமேடைக்கு அருகிலேயே இந்த கடிகாரம் அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கடிகாரம் திடீரென செயல்படாமல் நின்று போனது. இதையடுத்து இந்த கடிகாரம் கருப்பு துணி கொண்டு மூடப்பட்டது. எழும்பூர் ரெயில் நிலையம் பராமரிப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த தொன்மையாக கடிகாரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகளும், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "2020-ம் ஆண்டு முதலே இந்த கடிகாரம் செயல்படாமல் போய்விட்டது. இது 1900-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தயாரிக்கப்பட்ட கடிகாரம். இதில் பழுது ஏற்பட்ட உடன் இதை சரி செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால், கடிகாரத்தின் உள்ளே பழுது ஏற்பட்ட பொருள் சந்தையில் கிடைக்கவில்லை. பழுதான பொருளை மாற்ற பல மாதங்களாக சந்தை சந்தையாக அலைந்து பார்த்தோம். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. அதனாலேயே துணி கொண்டு மூடப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை அகற்றவும் முடியாது" என்றார்.


Next Story