மகளிர் சுயஉதவிக் குழு விழிப்புணர்வு முகாம்: பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் பயனடைவது எப்படி?


மகளிர் சுயஉதவிக் குழு விழிப்புணர்வு முகாம்: பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் பயனடைவது எப்படி?
x

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது.

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிரதமரின் சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டம் குறித்து, நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் சுயதொழில் செய்ய கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மகளிருக்கு மேலும் ஒரு வாய்ப்பாக பிரதமரின் சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி தொடர்பான தொழில் புரிய கடன் உதவி வழங்கப்படுகிறது. பொதுவாகவே, வழங்கப்படும் கடன் உதவிகளில் வட்டிக்கான மானியம் வழங்கப்படும். ஆனால், இந்த திட்டத்தில் வங்கிக் கடனில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கல்வி துணை கமிஷனர் டி.சினேகா மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story