கிணற்றுக்குள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி


கிணற்றுக்குள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 28 Sep 2023 1:30 AM GMT (Updated: 28 Sep 2023 1:30 AM GMT)

வடமதுரை அருகே, புறா பிடிக்க சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

கிணற்றுக்குள் வாலிபர் பிணம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெருமாள்கோவில்பட்டியில், சுமார் 40 அடி ஆழம் கொண்ட விவசாய கிணறு ஒன்று உள்ளது. அதில், 10 அடி தண்ணீர் இருக்கிறது. இந்த கிணற்றின் அருகே நேற்று காலை செருப்பு, வேல்கம்பு உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது உள்ளே 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த சரவணபாண்டி (வயது 24) என்று தெரியவந்தது.

இவர், மோர்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சரவணபாண்டி அந்த கிணற்றில் இருந்த புறாவை பிடிக்க முயன்றார்.

அப்போது, திடீரென நிலை தடுமாறி அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் பாறையில் மோதி படுகாயம் அடைந்த சரவணபாண்டி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. கிணற் றில் படிக்கட்டுகள் இல்லாததால் சரவணபாண்டியின் உடலை மீட்க முடியவில்லை.

உடல் மீட்பு

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, சரவணபாண்டியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புறாவை பிடிக்க சென்ற வாலிபர், கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சரவணபாண்டிக்கு சந்தியா என்ற மனைவியும், 3 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story