கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத பேருந்துகள் இயக்கம்


கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2024 4:58 AM GMT (Updated: 14 Jan 2024 5:41 AM GMT)

கடந்த இரு நாட்களில் அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். தொடர் விடுமுறை காரணமாகவும் பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 4,404 சிறப்பு பேருந்துகள், 6 இடங்களில் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. தென் தமிழக பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவில்லாத பேருந்துகளாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story