திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது...!


திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது...!
x

சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோருடன் பாதயாத்திரை சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்து சென்று கடித்து கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் சிறுத்தையால் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான். பலத்த காயம் அடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க உடனடி நடவடிக்கை தேவை என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடைபாதை மற்றும் வனப்பகுதியில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடைபாதை அருகே கூண்டுகள் வைத்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கின.

தற்போது மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. அந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக பிடிபட்ட 5 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், இரு சிறுத்தைகைள் திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story