அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்


அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
x

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து 2 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டதாக கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு 30.7.2021 அன்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எல்லா முகாந்திரங்களும் இருந்தும், தமிழக அரசு அவ்வாறு வழக்குப்பதிவு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், ஊழல் என்பது அரசுக்கும், சமூகத்துக்கும் எதிரானது. அதனை அனுமதிக்க முடியாது என கூறி, செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது என்றும், வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்திருந்தது.

தி.மு.க. அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில்பாலாஜியை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்ற, தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாக தெரிகிறது. தன் மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடருவாரேயானால், நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருந்தது. ஆனால் அந்த விசாரணையில் உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றார். இதையடுத்து செந்தில்பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான விசாரணையில் செந்தில்பாலாஜியை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து 2 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு உள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்களையும் அனுமதித்து உள்ளது. தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, தமிழக காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story