அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு - நாளை முதல் அமல்


அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு - நாளை முதல் அமல்
x

மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சென்னை,

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ஐ.டி.யை 9-9-2022 அன்று உருவாக்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-10-2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.8-க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது எனவும், இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் கருத்துகளை தெரிவித்தன.

அதை பரிசீலித்து, 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை ஐ.இ.-ஐ அறிமுகப்படுத்தியும், இக்குடியிருப்புகளுக்கு யூனிட்டுக்கு மின்கட்டணம் ரூ.5.50 என நிர்ணயித்தும் 1-11-2023 (நாளை) முதல் அமலுக்கு வருமாறு ஆணை வெளியிட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story