அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க சிறப்பு செயலாளர் நியமனம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்


அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க சிறப்பு செயலாளர் நியமனம் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
x

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க சிறப்பு செயலாளராக பொதுத்துறை செயலாளரை நியமித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் கட்டணம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சிறப்பு அதிகாரியை நியமிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்குவதற்காக சிறப்பு செயலாளராக பொதுத்துறை செயலாளரை நியமித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் துணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணங்களை வழங்க இணையதளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறையை அடுத்த 3 மாதங்களுக்கு செயல்படுத்தலாம் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Next Story