துணைவேந்தர்கள் நியமனம்: கவர்னரின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு முடிவு..!


துணைவேந்தர்கள் நியமனம்: கவர்னரின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு முடிவு..!
x

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கவர்னர் ஆர்.என். ரவியின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். தேடுதல் குழுவில் வழக்கமாக 3 உறுப்பினர்கள் இடம்பெறும் நிலையில், இந்த முறை 4 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கவர்னர் ஆர்.என். ரவியின் நடவடிக்கையை, சட்ட ரீதியாக அணுக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக் கழக சட்டவிதிகளில், கவர்னர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு பதவிக்காலம் ஆசிரியர் கல்வியியல் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் தேடுதல் உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி குழு நியமனம் செய்யப்பட்டு, கவர்னரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதுவரையில் எந்த ஒரு கவர்னரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது கவர்னர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். கவர்னரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் கவர்னர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது. மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.

தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு 28.04.2022 அன்று கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள் வரையில் இந்த மசோதாவிற்கு கவர்னரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. கவர்னர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story