ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்க டெல்லி பயணம்..? - ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்


ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்க டெல்லி பயணம்..? - ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி,

சென்னை வானரகத்தில் இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக-வின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எதிர்ப்பு தெரிவித்து மேடையில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் வீடுகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டுமென ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-இடம் பாஜக தலைவர்கள் அண்ணாமலை , சிடி ரவி வேண்டுகோள் விடுத்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் கூட்டணி கட்சியினர் அங்கு இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் ஆகையால் அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு வரவேண்டுமென அண்ணாமலை மற்றும் சிடி ரவி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையம் செல்லும் வழியில் டெல்லிக்கு செல்வது ஏன்? ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கவா? என ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு நாளை பாஜகவில் இருந்து நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலில் போது வருகை புரியுமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளார்கள். அதில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன்.

ஒற்றை தலைமை விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஏதேனும் பேச உள்ளீர்களா?, பாஜக தலைவர்கள் இன்று உங்களிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளதே இது குறித்து எதேனும் கூறுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிக்கவில்லை.


Next Story