தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரை கைது செய்க- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரை கைது செய்க- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 24-ந்தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் நடந்துள்ளன.

மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story