கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் எரிப்பொருட்கள் வருகை


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் எரிப்பொருட்கள் வருகை
x

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் ரஷ்யாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் கொண்டுவரப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. மேலும் கூடுதலாக ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மேலும் இரண்டாவது அணு உலை கடந்த மார்ச் மாதம் எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முதலாவது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அணு உலையின் மின் உற்பத்திக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு அங்கிருந்து 4 லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கூடங்குளத்திற்கு இன்று காலையில் வந்தடைந்தது.

25 கற்றைகள் கொண்ட சொறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் அங்குள்ள 3 அடுக்கு பாதுகாப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


Next Story