தகராறை தட்டிக்கேட்ட தந்தை-மகன் மீது தாக்குதல் - கல்லூரி மாணவர் கைது


தகராறை தட்டிக்கேட்ட தந்தை-மகன் மீது தாக்குதல் - கல்லூரி மாணவர் கைது
x

தகராறை தட்டிக்கேட்ட தந்தை மற்றும் மகனை தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை பெரவள்ளூர், லோகோ வொர்க்ஸ் முதல் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 80). இவர், தனது மகன் டேவிட் என்பவருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (29) மற்றும் பாலாஜி (20) ஆகியோர் ஒரு தம்பதியை வழிமறித்து மிரட்டி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை அந்தோணியும், அவருடைய மகனும் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், முதியவர் அந்தோணி மற்றும் அவருடைய மகன் டேவிட் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் அந்தோணியும், டேவிட்டும் வீட்டுக்கு செல்ல முயன்றனர். அப்போது தெரு விளக்கை அணைத்துவிட்டு கும்பலாக வந்த சதீஷின் கூட்டாளிகள் மேலும் சிலர் மீண்டும் தந்தை-மகன் இருவரையும் கடுமையாக தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (45), அவருடைய மகனான தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பாலாஜி (20) மற்றும் சுரேஷ் (28) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சதீஷ் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story