பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் "வழிபாட்டுரிமைப் பாதுகாப்பு" என்ற பெயரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் த.மு.மு.க சார்பில் இந்தியாவின் அரசியல் சாசன சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் அடையாறு பள்ளிவாசல் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. மற்றும் கிருஸ்தவ நல்லெண்ண இயக்க ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சையத் அலி தலைமை தாங்கினார்.


Next Story