திருவாரூர் கோவில் தேரோட்டத்தின் போது ஊதுகுழல் விற்க தடை


திருவாரூர் கோவில் தேரோட்டத்தின் போது ஊதுகுழல் விற்க தடை
x

திருவாரூரில் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இதுதான்.

இந்த தேரோட்ட திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருவிழாக்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஊதுகுழலை ஊதி பொதுமக்களுக்கு சில இளைஞர்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் திருவாரூர் தேரோட்டத்தின் போது, அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஊதுகுழலை விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story