தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 17 Feb 2024 5:27 AM GMT (Updated: 17 Feb 2024 5:55 AM GMT)

உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை விரைவில் வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆட்டோ, டாக்சி சங்கத்தின் மாநாட்டை தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும். முதல்-அமைச்சருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும்." என தெரிவித்தார்.


Next Story