அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில் புகார்


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில் புகார்
x

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடி சேலத்தில் பேசியதை மேற்கோள் காட்டி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நீங்கள் எல்லாம் டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவிகள்" என்றார். அப்போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, "இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பா.ஜ.க. சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.


Next Story