திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது' என சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அமோக வெற்றி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அகில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கர்நாடக தேர்தல் முடிவு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கம் செய்தது, நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியது, இந்தி திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.

மக்களாட்சியை மீட்போம்

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிக பெருமிதத்தை நிலைநிறுத்தி உள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story