அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; நெல்லையில் தீவிர சோதனை


அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; நெல்லையில் தீவிர சோதனை
x

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின் தலைமையகமாக செயல்பட்டு வரும் கொல்கத்தா அறிவியல் மையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரே அறிவியல் மையமான நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தற்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நெல்லை அறிவியல் மையம் முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்.

மாநகர காவல்துறை உதவி ஆய்வாளர் குலசேகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறிவியல் மையத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் பார்வையாளர்களின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story