சுப்ரீம் கோர்ட்டின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு


சுப்ரீம் கோர்ட்டின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
x

கோப்புப்படம் 

முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதவெறி தாக்குதலில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது குழந்தை உட்பட 14 பேர் கொடூரப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் மும்பை கோர்ட்டு 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை கைதி உட்பட குற்றவாளிகள் அனைவரும் தண்டனை காலம் முடியும் முன்பு, குஜராத் மாநில பாஜக அரசால், கடந்த 2023 ஆகஸ்ட் 15 விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசின் விடுதலை உத்தரவை எதிர்த்து, பில்கிஸ் பானுவும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உட்பட மாதர் அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தன. இந்த முறையீடுகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று (08.01.2024) குஜராத் மாநில பாஜக அரசின் உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதே போல் முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னேறிய சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்காது என்று எடுத்த கொள்கை முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் நீதி, சமூக நீதி காக்கும் இரண்டு தீர்ப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story