இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

இறப்புத்தொகை பெற மனுவை பரிந்துரைக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது சித்தப்பா பண்டாரி இறந்ததையடுத்து கடந்த 7.6.2010 அன்று அரசாங்கத்தால் வழங்கப்படும் இறப்பு தொகை கேட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுபிள்ளை (வயது 67) என்பவரிடம் சோமசுந்தரம் அவரது சித்தி கற்பகம் ஆகியோர் மனு சம்பந்தமாக சென்று கேட்டனர்.

அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு பிள்ளை மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள லஞ்சமாக ரூ.1,100 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத சோமசுந்தரம் இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை சோமசுந்தரத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலு பிள்ளை லஞ்ச பணத்தை பெற்ற போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்புகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலரஸ் கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவலு பிள்ளை லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story