திருத்தணியில் கடன் பிரச்சினையால் பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை


திருத்தணியில் கடன் பிரச்சினையால் பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை
x

திருத்தணியில் கடன் பிரச்சினையால் அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவள்ளூர்

கடன் பிரச்சினை

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்கு பணம் தேவைப்பட்டதால் பலரிடம் வட்டிக்கு பணம் பெற்றதாகவும், இது தவிர ஏற்கனவே இவருக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்களுக்கு உரிய நேரத்தில் வட்டி மற்றும் அசல் கொடுப்பதற்கு முடியாமல் சீனிவாசன் தவித்து வந்தார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயபுரம் ஊராட்சி பத்மாபுரம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தார் உற்பத்தி செய்யும் ஆலை அருகே தனியாக சென்ற நிலையில் தனது பையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

சீனிவாசன் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பலத்த தீக்காயத்த சீனிவாசனை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீக்குளித்து பலியான சீனிவானுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கடன் தொல்லையால் அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story