உத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்


உத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்
x

உத்திரமேரூர் அருகே பஸ்- லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் படூரில் இருந்து நேற்று மாலை 4 மணி அளவில் காஞ்சீபுரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அமராவதி பட்டினத்தை சேர்ந்த செல்வம் பஸ்சை ஓட்டிச்சென்றார் சிறுமயிலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி அரசு பஸ் மீது மோதியது. பஸ்சின் ஒருபுறம் முழுவதுமாக சேதம் அடைந்தது.

பஸ்சில் பயணம் செய்த புனிதா (வயது 51), ரதி (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இவர்களில் புனிதா படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் நர்சாக பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து கோவிந்தவாடி அகரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ரதி படூர் அருகே உள்ள நெற்குன்றத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டு தனது கணவர் வீடான காரை என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

மேலும் அதே பஸ்சில் பயணம் செய்த பள்ளி தலைமை ஆசிரியை மோகனா (57), நிர்மலா (56), மோகன சுந்தரி (48) புனிதா (41), நர்சு குமாரி (49), சுரேஷ் (57), இறந்து போன ரதியின் குழந்தை ஜெசிகா (3) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விபத்தில் பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story