தமிழ்நாடு முழுவதும் 93.90% பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்


தினத்தந்தி 9 Jan 2024 1:17 AM GMT (Updated: 9 Jan 2024 5:35 AM GMT)

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை,


Live Updates

  • 9 Jan 2024 4:38 AM GMT

    தமிழ்நாடு முழுவதும் 93.90% பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்

    தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 93.90% பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பஸ்கள் 95.27% இயக்கப்படுகின்றன.

    விழுப்புரம் கோட்டத்தில் 84.02% பஸ்களும், சேலத்தில் 98% பஸ்களும் இயக்கப்படுகின்றன. நெல்லையில் 96.76% பஸ்களும், கோவையில் 95.17% பஸ்களும், கும்பகோணத்தில் 91.17% பஸ்களும், மதுரையில் 98.12% பஸ்களும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

  • 9 Jan 2024 4:30 AM GMT

    தமிழகம் முழுவதும் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்

    சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. போராடுவது உங்கள் (போக்குவரத்து தொழிலாளர்கள்) உரிமை. ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நிதிநிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்காக கால அவகாசம்தான் கேட்கிறோம்.

    அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  • 9 Jan 2024 3:15 AM GMT

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

  • 9 Jan 2024 2:47 AM GMT

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள நகர பஸ்களில் 90 சதவீதமும், புறநகர் பஸ்களில் 80 சதவீதமும் இயக்கப்படுகின்றன.

  • 9 Jan 2024 2:47 AM GMT

    கள்ளக்குறிச்சி:

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சீரான இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உளுந்தூர்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் வருகை குறைவால் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

  • 9 Jan 2024 2:20 AM GMT

    சென்னை:

    காலை 7 மணி நிலவரப்படி, சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2 ஆயிரத்து 749 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3 ஆயிரத்து 92 பஸ்கள் இயக்கப்படவேண்டிய நிலையில் 2 ஆயிரத்து 749 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  • 9 Jan 2024 1:54 AM GMT

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுகின்றன. 158 புறநகர் பஸ்கள், 71 நகர் பஸ்கள் என மொத்தம் 229 பஸ்களில் 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  • 9 Jan 2024 1:51 AM GMT

    நாமக்கல்:

    நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பணிமனைகளில் இருந்து 100% பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  • 9 Jan 2024 1:49 AM GMT

    நெல்லை:

    நெல்லை மண்டலத்தில் 70 முதல் 80% பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை கோட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில் உள்ள 1 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை கோட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 500 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியில் உள்ளனர்.

  • 9 Jan 2024 1:46 AM GMT

    திருச்சி:

    திருச்சியில் 90% புறநகர் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து பொது மேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். திருச்சியில் 2 பஸ் நிலையங்களில் 130 பஸ்களில் 110 பஸ்கள் இயங்குகின்றன என அவர் தெரிவித்தார்.


Next Story