'தி கேரளா ஸ்டோரி' தடை கோரிய வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


தி கேரளா ஸ்டோரி தடை கோரிய வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுடன் திரைக்கு வரவுள்ளது.

சென்னை,

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ''டீசர்'' சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த படம் நாளை திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே, இந்த படம் கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடனும் சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, டீசரில் உண்மை கதை என்றும், தற்போது பேட்டிகளில் கற்பனை கதை என்றும், பட தயாரிப்பு குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்த படத்திற்கு எதிராக அளித்த புகாரின் மீது தணிக்கை குழு எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தணிக்கை சான்று வழங்கமுடியாது என வாதிடப்பட்டது.

அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், இது உண்மை கலந்த கற்பனை படம் என்று விளக்கமளிக்கப்பட்டது. ஏற்கெனவே தணிக்கை சான்று வழங்கப்பட்ட நிலையில், தடை கோரி தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு உகந்தது அல்ல என்று வாதிடப்பட்டது.

இதில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே இந்த படம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு, மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், படத்திற்கு தமிழக ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை ஐகோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story