மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது - சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேச்சு


மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது - சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2024 12:35 PM GMT (Updated: 21 Jan 2024 1:23 PM GMT)

10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட இளைஞர் அணி படை திரண்டு வந்துள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம்,

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-

திமுக இளைஞரணி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாநாடு வருகிற தேர்தலுக்கான வெற்றி மாநாடு. சேலம் மாநாட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட இளைஞர் அணி படை திரண்டு வந்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர், பிரதமராக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

நீட் உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது; 11 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுமார் 85 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். கல்வி, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்தி பயமுறுத்த நினைக்கின்றனர். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்.

மாநில அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி தருவதற்கு நாங்கள் என்ன ஏடிஎம் எந்திரமா என்று கேட்டார்கள். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதையை நான் கொடுத்துவிட்டேன். ஆனால் நாங்கள் கேட்ட நிதியை அவர்கள் இன்னும் தரவில்லை.

தமிழ் மொழி உரிமை அல்ல; எங்களது உயிர். தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story