ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் சில்மிஷம் - மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது


ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் சில்மிஷம் - மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது
x

ஓடும் ரெயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர்,

திருப்பத்தூர் மாவட்டம் முனியப்பன் நாயக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் பணியின் காரணமாக நேற்று இரவு பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு வந்தார். பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பி 2 ஏசி பெட்டியில் அவர் பயணம் செய்தார்.

அவரது சீட் அருகே குழந்தையுடன் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இருந்தார். அதிகாலை 3 மணிக்கு ரெயில் ஆம்பூர் ரெயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது .அப்போது மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர் சுரேஷ் மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.

அவர் குழந்தையுடன் பயணம் செய்த இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம் பெண் கண்டித்தார். ஆனாலும் சுரேஷ் விடவில்லை. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் இளம்பெண் அலறி கூச்சலிட்டார். அங்கிருந்த பயணிகளிடம் நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறினார். பயணிகள் சுரேஷை இருக்கையில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது போதையில் இருந்த போலீஸ்காரர் சுரேஷ் ரகளையில் ஈடுபட்டார். அதற்குள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

பயணிகள் இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக பி2 ஏசி பெட்டி அருகே வந்து தயாராக நின்றனர். ரெயில் நின்றதும் உள்ளே வந்து ரகளையில் ஈடுபட்ட சுரேஷை பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். எனவே சுரேஷ் ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story