3 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


3 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Nov 2023 11:40 PM GMT (Updated: 1 Nov 2023 11:42 PM GMT)

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் சில இடங்களில் லேசான மழையும் பதிவானது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களிலும், நாளை (03-10-2023) முதல் (05-10-2023 வரை) 3 நாட்களுக்கு அனேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்றும், நாளையும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story