'சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னரின் பெயரை சூட்ட வேண்டும்' - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னரின் பெயரை சூட்ட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு பல்லவ மன்னரான 'மாமல்லன்' பெயரை சூட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்."

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



Next Story