அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க பணி தொடக்கம்


அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க பணி தொடக்கம்
x
தினத்தந்தி 30 Dec 2023 10:00 PM GMT (Updated: 30 Dec 2023 10:01 PM GMT)

அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணியை ‘காவிரி' எந்திரம் தொடங்கியதை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை பணிகள் நடந்து வருகிறது. இதில் கெல்லிஸ் முதல் தரமணி வரையில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தொடங்கியது. இதில் 'காவிரி' மற்றும் 'அடையாறு' என இரண்டு சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் 'காவிரி' சுரங்கம் தோண்டும் எந்திரம் 583 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. 'அடையாறு' சுரங்கம் தோண்டும் எந்திரம் 250 மீட்டர் தொலைவில் நெருக்கமாக பின்தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் எந்திரங்களும் அடையாறு சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.

இந்த நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story