தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

திருவொற்றியூரில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா 2-வது தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது.

இந்த தெருவில் மின் இணைப்பு வயர்கள் மிகவும் பழுது அடைந்ததால் நேற்று பெய்த மழையின் போது மழைநீர் அந்த மின் இணைப்புகளில் பட்டு வெடிக்க ஆரம்பித்து மேலே நெருப்பு பொறிகளாக வெளிவந்தது. இதனால் யாரையும் மின்சாரம் தாக்க கூடாது என்பதால் அந்த மின்சார பெட்டி அருகில் அக்கம் பக்கத்தினர் கட்டைகள் வைத்து தடுப்பு போட்டு வைத்தனர்.

மேலும் தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மின்சார வாரிய ஊழியர்களை வரவழைத்து பழுதடைந்த மின் வயர்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story