கல்லூரியில் மோதல் சம்பவம்: 18 மாணவர்களை கூண்டோடு நீக்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை


கல்லூரியில் மோதல் சம்பவம்: 18 மாணவர்களை கூண்டோடு நீக்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2023 5:05 PM GMT (Updated: 21 Aug 2023 5:10 PM GMT)

சென்னை தனியார் கல்லூரியில் பட்டாசு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் 18 மாணவர்களை நீக்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் (குருநானக்) கல்லூரியில் மாணவர்கள் இரு பிரிவினரிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த இருபிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாகவும், அந்த மாணவர்களில் ஒருவர் பட்டாசுகளை அங்கு வீசியதாக கூறப்படுகிறது. அந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்த நிலையில், இதனால் அந்த கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் பட்டாசு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 18 மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story