கோவையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


கோவையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
x

பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை,

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய 4 பிரிவுகளில் 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் பலர் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தாக அவ்வபோது சில புகார்கள் எழுந்து வருகின்றன. இது போன்ற புகார்கள் வரும் போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், கோவை மாவட்டம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களின் சான்றிதழ்களை பரிசோதித்து அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை வரும் 6-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது யாரேனும் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்ததது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story