காதல் திருமணம் செய்த ஓராண்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


காதல் திருமணம் செய்த ஓராண்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி, கரு கலைந்து விட்டதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை கோயம்பேடு, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி லிங்கேஸ்வரி (21) என்பவரை காதலித்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

லிங்கேஸ்வரி, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக லிங்கேஸ்வரியின் கரு கலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த லிங்கேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய லிங்கேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.லிங்கேஸ்வரிக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நெற்குன்றம், மீனாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (26). ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி ரோசி (26). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று வழக்கம்போல் லட்சுமணன் வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த ரோசி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோசியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story