லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில்உரிமையாளருக்கு ரூ.14.40 லட்சம் இழப்பீடு


லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில்உரிமையாளருக்கு ரூ.14.40 லட்சம் இழப்பீடு
x

லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில் பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு ரூ.14.40 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

நாமக்கல்

லாரி தீப்பற்றி எரிந்தது

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள வேலம்மாவலசு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 48). இவர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இந்த வாகனத்துக்கு தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரீமியம் செலுத்தி காப்பீட்டு பாலிசி பெற்று உள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ராஜஸ்தான் செல்வதற்காக அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, கனமழை பெய்ததால் அங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சாலையின் ஓரமாக நின்று உள்ளார். மழை நின்ற பின்பு பிறகு திடீரென லாரி தீப்பிடித்து எரிய தொடங்கிவிட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் லாரியில் இருந்த சரக்கு முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது.

இழப்பீடு வழங்க உத்தரவு

லாரியில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு ரூ.12 லட்சம் கேட்டு அவர் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்தார். காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த அளவையர் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் காப்பீட்டு நிறுவனம் எவ்வித தொகையும் கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் காப்பீட்டு நிறுவனம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. பின்னர் மேல்முறையீட்டில் இந்த தொகை செலுத்தப்படும் வரை காப்பீட்டு நிறுவனம் 7.5 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

சமரச பேச்சுவார்த்தை

காப்பீட்டு நிறுவனம் உத்தரவின் அடிப்படையில் தொகையை செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட பழனியப்பன், காப்பீட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தொகையை வசூலித்து தர வேண்டுமென நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார். வழக்கு தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் பிரச்சினையை தீர்க்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தராக வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவரை கடந்த வாரம் நியமனம் செய்தது.

இந்த சமரச பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட பழனியப்பனுக்கு ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 132 வழங்க காப்பீட்டு நிறுவனம் சம்மதம் தெரிவித்ததால் சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஆணையத்தில் சமர்ப்பித்தது. இந்த காசோலையை ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராமராஜ் பாதிக்கப்பட்ட பழனியப்பனிடம் வழங்கினார்.


Next Story