'கிணத்தை காணோம்' வடிவேலு பாணியில் செல்போன் டவரை காணோம் என புகார் - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!


கிணத்தை காணோம் வடிவேலு பாணியில் செல்போன் டவரை காணோம் என புகார் - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...!
x

செல்போன் டவர் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஒரு கும்பல் அங்கு வந்து, அங்கிருந்த பாதுகாவலரிடம் சில ஆவணங்களை காட்டி இந்த செல்போன் டவர் செயல்பாடற்று உள்ளது. எனவே இதை கழற்றி வேறு இடத்தில் நட உள்ளோம் என்று காவலரிடம் தெரிவித்தனர்.

பின்னர், அந்த கும்பல் செல்போன் டவரை, ராட்சத கிரேன் எந்திரங்களைக் கொண்டு கழற்றியது. அந்த பகுதியில் வசிப்பவர்களும் இது பற்றி கேட்டபோது, மர்ம கும்பல் அதையே தான் கூறியது. இதனால் அங்கிருந்தவர்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தான் என நம்பினர்.

இதையடுத்து மர்ம கும்பல் செல்போன் டவர் முழுவதையும் கழற்றி கடத்திச் சென்று விட்டது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் செல்போன் டவரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு செல்போன் டவர் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செல்போன் டவர் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்தது. இதை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். இது பற்றி நிறுவனத்தின் மேலாளரான சேலத்தை சேர்ந்த, தமிழரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டவரை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் குறித்து சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும். தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் தற்போது செயல்பாடற்று காணப்படுகின்றன. இவற்றை குறிவைத்து மர்ம கும்பல் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது.

குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு செல்போன் டவர்களை அந்த மர்ம கும்பல் குறி வைத்து திருடியுள்ளது என்பது போலீசாரின் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல் குறித்து வாழப்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story