சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி


சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி
x

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

விருதுநகர்

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சாட்சியாபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமைச்சர் தங்கம்தென்னரசு பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தினை நேற்று காலை ஆய்வு செய்தார்.

அப்போது பாலம் அமைக்கப்படும் தூரம், செலவு போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பாலம் அமைக்கும் பணி நடக்கும் போது இந்த பகுதியில் இலகுரக வாகனங்கள் கடந்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது அசோகன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயசீலன், மேயர் சங்கீதா இன்பம், ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் வடிவேல், துணைமேயர் விக்னேஷ்பிரியா காளிராஜ், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் வனராஜா, உதயசூரியன், அதிவீரன்பட்டி செல்வம், பிரவீன் உள்பட பலர் உடனிருந்தனர்.

பாலம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

சாட்சியாபுரம் பகுதியில் பாலம் அமைக்க தேவையான முதல் கட்ட பணிகள் முடிந்து விட்டது. விரைவில் பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. தற்போது இந்த பணி நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.64 கோடி செலவில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழி ஏற்பாடு செய்யப்படும்.

பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு வியாபாரிகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆனைக்குட்டம் அணையினை ஆய்வு செய்து வளர்ச்சி பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சாலை விபத்தில் இறந்த செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கும், கிருஷ்ணபேரி அபிமன்னன் குடும்பத்தினருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் சிவகாசியில் நடைபெற்ற நீட்தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story