சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம்? அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம்? அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியும் இன்றி 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி கோவில் தீட்சிதரான நட்ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், நந்தவனம் அமைக்க 100 அண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டதோடு, பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பிலும், தமிழக தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.



Next Story