காணும் பொங்கலை கொண்டாட கன்னியாகுமரியில் குவிந்த மக்கள் கூட்டம் - படகு போக்குவரத்து நேரம் அதிகரிப்பு


தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கன்னியாகுமரி,

தமிழ்நாட்டில் இன்று காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று அதிகாலை முதலே கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வருகின்றனர்.

இதனை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சூரிய அஸ்தமனத்தைக் காண்பதற்காக கடற்கரை பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிந்து வருகின்றனர்.


Next Story