'மிக்ஜம்' புயல்: மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு


மிக்ஜம் புயல்: மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Dec 2023 6:05 PM GMT (Updated: 3 Dec 2023 6:08 PM GMT)

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னையில் தற்போது இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் சென்னைக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை தற்போது பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.




Next Story